01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Monday, September 30, 2013

பெரியாரின் வார்த்தையை தவிர வேறெவர்க்கும் அடிப்பணிய மாட்டேன்!! - எம்.ஆர்.ராதா

எனது தலைவர் தந்தை பெரியாரின் வார்த்தையை
தவிர வேறெவர்க்கும் அடிப்பணிய மாட்டேன்!!!
====================================================

 நான் ஒரு சரித்திரம் உண்டாக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

ராதா என்று ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய நாற்பதாண்டு நாடக வாழ்விலும் இரண்டே இரண்டு நாடகங்களைத் தான் நடத்தினான்.

மக்களும் அவைகளைச் சலிக்காமல் பார்த்தார்கள் என்ற வரலாற்றை உண்டாக்க நினைக்கிறேன்.

அதை உண்டாக்கி காட்டுவேன்" என்று கூறினார் எம்.ஆர்.ராதா.

அந்த இரண்டு நாடகங்கள்

இராமாயணம்,

தசாவதாரம்.

வால்மீகி எழுதிய இராமாயணத்தை ஆதாரமாக வைத்து 'திருவாரூர் தங்கராசு' வசனங்களை எழுதினார்.

தசாவதாரம் நாடகத்தை 'குத்தூசி குருசாமி' எழுதினார்.

இருவரும் தந்தை பெரியாரின் தீவிர தொண்டர்கள்.

இப்படி பெரியாரின் தொண்டர்கள் இதிகாசங்களை மையப்படுத்தி நாடகம் நடத்தினால் எள்ளல் துள்ளலுக்கு பஞ்சம் இருக்குமா என்ன?


ஒரு நாடகம் மக்களுக்காக நடத்தப்படுகிறது என்றால் ஒன்று மக்கள் இரசனைக்கு ஏற்ப கதைகளை உருவாக்குவதும், லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் கலைகளை கையாளும் மோசடியாட்களுக்கு மத்தியில் கொள்கைக்காக நஷ்டப்பட்டு, சொந்த பணத்தையும் இழந்து,

அரசாங்கம் கொடுக்கும் நெருக்கடிகளையும் ஒரு கலைஞன் எதிர் கொள்கிறான் என்றால் மக்களை நேசிப்பவர்களால் மட்டுமே இலாப நோக்கமற்று இயங்க முடியும் என்பதை எம்.ஆர்.ராதா மெய்ப்பிக்கிறார்.

நாடகத்துறையில் மட்டுமல்ல. திரைப்படத்துறையிலும் எம்.ஆர்.ராதாவின் கொள்கைப் பிரச்சாரம் தொடர்ந்தது.

அன்றைய அரசாங்கமாக இருந்த காங்கிரஸ் பலவிதங்களிலும் நெருக்கடி ஏற்படுத்தி பார்த்தது.

எம்.ஆர்.ராதா அசருவதாய் இல்லை. தடைகளை மீறி [கிட்டதட்ட நூறு தடைகளுக்கும் அதிகம்] தொடர்ந்து நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

இன்னொருபுறம் காவல்துறை ஏற்படுத்திய நெருக்கடியையும் நீதிமன்றம் மூலம் தகர்த்தெறிந்தார்.

இதனால் ஏராளமான பொருட்செலவுகளை விரயம் செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் எம்.ஆர்.ராதாவோ சோர்வதாக இல்லை.

தொடர்ந்து நாடகத்திற்கு மக்களிடம் இருந்து அமோக வரவேற்று கிடைக்கவே அரசு கலக்கமுற்றது.

எம்.ஆர்.ராதா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவரும் சளைப்பதாக இல்லை. தொழிலைக் காப்பாற்றுவதற்காக அவர் போராடவில்லை.

கொள்கையை காப்பாற்றுவதற்காகவும் கருத்துச் சுதந்திரமும் மாற்றுக் கருத்தாக்கமும் காப்பாற்றப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு எதிராக நின்றார்.

"ஒரு நாடக அரங்கிற்கு நான் வாடகை கொடுத்து வாடகைக்கு வாங்குகிறேன்.
அது குறிப்பிட்ட காலத்திற்கு அது என்னுடைய சொந்தமான அந்தரங்கமான இடம் [private room] அங்கே கட்டணம் செலுத்தி நாடகம் பார்க்க வருபவர்கள் விரும்பி வருபவர்கள்.

நான் யாரையும் கட்டாயப்படுத்தி இழுக்கவில்லை.

என் தனி அறைக்கு விரும்பி வருகிறவர்கள், நான் மேல் சட்டையோடு இருக்கிறேனா என்று கேட்க முடியாது.

அதுபோல்தான் என் அறையில் நடக்கும் நாடகமும் என் விருப்பப்படி தான் இருக்கும்.
அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது."
என்று வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பினார் எம்.ஆர்.ராதா.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நீதிபதிகள் முழித்தார்களாம்.

இதற்கு ஏதாவது முடிவுகட்டியே தீரவேண்டும் என்றிருந்த அரசாங்கம் தமிழக சட்டமன்றத்தில், "நாடகங்களில் வசன நடைமுறைகளை ஒழுங்கு செய்யும் உரிமை அரசாங்கத்திற்கு தேவை என்று சட்டம் கொண்டுவந்தது.

ஒரு நாடகத்தின் மொத்தக் கதை - வசனங்கள் உட்பட அனைத்து தரவுகளையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து அவர் அனுமதி பெற்று அதன்படியே நாடகம் நடைப்பெற வேண்டும்.(எம்.ஆர்.ராதாஅவர்களுக்காகவே இந்தியாவிலயே இப்படியொரு சட்டத்தை முதன்முதலாக அரசு கொண்டு வந்தது)

தேவையற்ற உரையாடல்களோ, சில நிகழ்ச்சிகளையோ, சில வசனங்களையோ அல்லது முழு நாடகத்தையும் தடை செய்யவோ மாவட்ட ஆட்சியருக்கும் அரசுக்கும் உரிமை உண்டு"

என்று சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் சுதந்திரப் போர் நடைப்பெற்ற போது போராட்ட வடிவங்களை நாடகங்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு சென்ற குழுக்களே இத்தனை கெடுபிடிகளை ஆட்சிக்கு வந்தபின் [காங்கிரஸ்] செய்தது தான் கொடுமையானது.

கருத்துச் சுதந்திர அடக்குமுறை சட்டமாக்க வேண்டிய அவசியத்தை எம்.ஆர்.ராதாவின் நாடகம் ஏற்படுத்துகிறது என்றால் நாடகத்தின் தாக்கம் அப்படிப்பட்டது.

அரசியலை நையாண்டி செய்வது, தலைவர்களின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவது, இதிகாசங்களையும், மூடநம்பிக்கைகளையும் எள்ளல் செய்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த முயல்வது போன்ற செயல்பாடுகளை எம்.ஆர்.ராதா கலை மூலம் வெளிக் கொண்டுவந்த போது மக்களிடம் கிடைத்த வரவேற்பு அரசாங்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

குறிப்பாக திராவிட இயக்கத்தின் பல்வேறு முனைப் பிரச்சாரங்களை ஒழிக்க 1947 முதல் 1965 வரை தமிழகத்தை ஆண்ட அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தந்தை பெரியாரையும் விஞ்சி நிற்கும் அளவிற்கு கடும் அடக்குமுறைகளை நாடக பிரச்சாரத்தில் எம்.ஆர்.ராதா சந்தித்திருக்கிறார்.

தந்தை பெரியாரின் சமுதாய புரட்சி இயக்கமாக இருந்த திராவிட கழகத்தின் கொள்கைப் பிரச்சாரங்களை சட்டத்தின் மூலம் ஒடுக்க முனைந்த அரசு முதல் திணிப்பை எம்.ஆர்.ராதாவிடமே காண்பித்தது.

பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பகுத்தறிவு பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அண்ணா, கருணாநிதி உட்பட பலர் பின்னாலில் கட்சி அமைத்து அரசியலுக்குள் நுழைந்தபோதும்

எம்.ஆர்.ராதா மட்டும் கடைசி வரை பெரியாரின் தொண்டராக வாழ்ந்து மறைந்தார்.

ஒரே கொள்கை, ஒரே தலைவர் என வாழ்ந்து கொள்கைப் பிரச்சாரத்திற்காகவே பல அடக்குமுறைகளை சந்தித்தும் கொள்கையை விட்டுக் கொடுக்காத எம்.ஆர்.ராதா அண்ணா, கருணாநிதியை விட தந்தை பெரியாரை மதித்து கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த நேர்மையான தொண்டராகவே திராவிட இயக்க வரலாறுகளில் அடையாளப்படுத்தப்படுகிறார்!

No comments:

Post a Comment